152A
152A கான்கீரிட் வீட்டின் மீது மிகச் சிறிய உந்துகணை செலுத்தி விழுந்தது. காந்தி தன் கண்ணாடியைச் சரி செய்து பார்க்கும் போது அந்த வீடு இருந்த இடத்தில் சிறிய குழி மட்டும் இருந்தது. தன் ஊன்றுகோலை சற்று பலமாக பிடித்துக்கொண்டார். அவரது உதடுகள் நடுங்கின. அவரால் என்ன நடந்தது எனப் புரிந்துகொள்ள முடியவில்லை. மனுவை காணவில்லை. தான் மட்டும் இப்படித் தனியாக இருப்பதை நினைத்து யோசனையில் ஆழ்ந்தார். அவரால் முன் பின் நடந்த சம்பவங்களை நினைவில் கொண்டு வர முடியவில்லை. இருபது வயதுக்குள் இருக்கும் பத்து பேர் கொண்ட கூட்டம் கூச்சலிட்டுக்கொண்டு அந்த தெருவில் ஓடிவந்தது. காந்தியின் கைத்தடியை தட்டிவிட்டு ஹோய்..என அவர்கள் கூச்சலிட்டவாறு ஓடிப்போயினர். பின்னாலே நான்கு பேர் கொண்ட கும்பல் கைகளில் கருநிற நாகம் போன்ற துப்பாக்கியை வைத்துக்கொண்டு மிரட்டும் தோரணையில் நடந்து வந்தனர். அவர்களது நடையில் ஒரு நிதானமும் திமிரும் தொனித்தது. காந்தி சற்று தடுமாறி தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். கீழே விழுந்த குச்சியை எடுத்து தன் கண்ணாடியைச் சரி செய்துகொண்டு பார்த்தார். பிச்சைக்காரனே! உனக்கு இங்கே என்ன வேலை? என கைகளில் காப்பு போட்டிருந்த இள...